அன்னையின் உணர்வுகள்
மகனே!
உதிரத்தில் உதித்த முத்தே!
உன் உதிரம் உதிர்த்து
எங்கள் பசியாற்ற இன்று
பணியாற்றச் சென்றுள்ளாயே!
எழுதுகோல் பிடித்த கரங்களால்
எந்திரம் பிடிக்கச் சென்றவனே!
பணி இடையில் பசியும் ஆறினாயோ? அல்லது
பசி பொறுத்து பணி ஆற்றுகிறாயோ?
மகனின் உணர்வுகள்
தொடங்கிவிட்டது வாழ்க்கைப் பயணம்..
ஓடுகின்ற ரயிலோடு
ஓடுகின்றது நினைவுகளும் ...
தங்கையின் கல்யாணம்..
அக்காவுக்கு வீடு..
அப்பாவுக்கு மருத்துவம்
அடடடா இன்னும் எவ்வளவோ ..
எண்ணங்கள் ஓடுகையிலே ரயில் நின்றுவிடுகிறது தரிப்பிடத்திலே எண்ணங்களின் ஓட்டங்களோ இன்னும் நிற்கவில்லை ...
புதிய வேலை..புதிய சூழ்நிலை..புதிய மனிதர்கள்..புதிய பரிணாமம்.. மொத்தத்தில் புதிய உலகம்..
என் திறன் கொண்டு
எந்திரம் தனில் வேலைதனை தொடங்கையிலே ..
வெறுக்க வைக்கிறான் வெளிநாட்டவன் ..
நெடுநேர சங்கின் ஒலி..
மதிய உணவு இடைவெளியாம்!
பாசத்தில் பரிமாறும்
அம்மாவின் உணவில் குறை கண்டோமே!
இன்று குறைந்தாலும் குறையிருந்தாலும்
நிறை காணவேண்டுமே!
மறுபடியும் வேலை ...
மறைகின்றது எண்ணங்கள் ...
மறக்காவிட்டால் மறக்க வேண்டிவரும்
வேலையை ..உண்பதற்கு.
மாலை..
மீண்டும் வாழ்க்கைரயில் பயணம்..
---சத்யா---

No comments:
Post a Comment